கொல்கத்தா மருத்துவர் கொலை: ஆயிரக்கணக்கானோர் திரண்டு மனித சங்கிலி போராட்டம்!

கொல்கத்தா மருத்துவர் கொலை: மனிதச் சங்கிலி போராட்டம்!
கொல்கத்தா மருத்துவர் கொலை: ஆயிரக்கணக்கானோர் திரண்டு மனித சங்கிலி போராட்டம்!
படம் | பிடிஐ
Published on
Updated on
2 min read

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி மருத்துவர்களும் பொதுமக்களும் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை(செப். 8) கொல்கத்தாவில் நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை மாலை, மனிதச்சங்கிலிப் போராட்டத்தை முனெடுத்தனர். தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு, தேசியக்கொடியை ஏந்தியபடி அவர்கள் தேசிய கீதத்தை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்எஃப்ஐ மற்றும் டிஒய்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தோர் பலரும் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா மட்டுமன்றி மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

படம் | பிடிஐ

இதுகுறித்து உயிரிழந்த பெண் மருத்துவரின் தாயார் கூறுகையில், “எனக்கு ஒரேயொரு குழந்தை இருப்பதாகவே நினைத்தேன். ஆனால், இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து மருத்துவர்களையும் எனது குழந்தைகளைப் போன்றே கருதுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தெற்கு கொல்கத்தாவில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 4,000 பேர், 2 கி.மீ. தூரத்துக்கு பேரணியாக நடந்து சென்றனர். அதில் பெரும்பாலானோர் பெண்களாவர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிசெய்யப்படுவதுடன், அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான இளம் மருத்துவர்களும் பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

போரட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 100 ரிக்‌ஷா வண்டிகளை தங்கள் கைகளால் இழுத்தபடி ஊர்வலமாகச் சென்று ரிக்‌ஷா ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையும் கொல்கத்தாவில் காண முடிந்தது.

படம் | பிடிஐ

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதிகோரி, கடந்த ஆகஸ்ட் 14-அம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவில் அணிதிரண்டு போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

படம் | பிடிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com