

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைசெய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடல் கூறாய்வு செய்வதற்கான கோரிக்கை கடிதம் இல்லாமல், உடல் கூறாய்வு செய்தது எப்படி என்று உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.
உடல் கூறாய்வுக்காக ஒரு உடலை ஒப்படைக்கும்போது பெறப்படும் செல்லான் எங்கே? ஒரு அடிப்படை கடிதம் இல்லாமல், எவ்வாறு உடல் கூறாய்வு செய்யப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, சிபிஐ பதிவில், செல்லான் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செல்லானை வழக்கு விசாரணை ஆவணங்களில் சேர்க்க நேரம் வழங்குமாறு மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.
விசாரணை அறிக்கை
வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி பெண் மருத்துவர் வன்கொடுமை- கொலை வழக்கை தாமாக வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா், ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில், காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக்கொண்ட அமர்வு முன், பெண் மருத்துவர் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.