மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கூடாரங்களை அகற்ற காவல் துறை அழுத்தம் கொடுப்பதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு.
போராட்டத்தில் இளநிலை மருத்துவர்கள்
போராட்டத்தில் இளநிலை மருத்துவர்கள்பிடிஐ
Published on
Updated on
2 min read

கொல்கத்தா சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கூடாரங்களை அகற்ற காவல் துறை அழுத்தம் கொடுப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இளநிலை மருத்துவர்கள் சாலைகளில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கூடாரம், மூங்கில்கள், மின் விசிறி போன்றவற்றை ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

போராட்டத்தைக் கலைக்கும் நோக்கத்தில் காவல் துறையினர் கொடுக்கும் அழுத்தத்தின் எதிரொலியாக இவை நடப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், மருத்துவர்களின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடரும் மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், 5 முறை பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதனிடையே செப். 16 இரவு முதல்வர் மமதா பானர்ஜி - இளநிலை மருத்துவக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகளை முழுமையாக ஏற்கவில்லை என்றாலும், 3 கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டது.

அதன்படி, மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநர் தேபாசிஷ் ஹல்தார் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கெளஸ்தவ் நாயக், கொல்கத்தா வடக்கு மண்டல துணை காவல் ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை முடிப்பது குறித்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு செய்வோம் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சால்ட் லேட் பகுதியிலுள்ள மாநில சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு சாலையில் கூடாரம் அமைத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் கூடாரம், மூங்கில்கள், மின் விசிறி போன்றவற்றை ஊழியர்கள் அகற்றியுள்ளனர். போராட்டத்தைக் கலைக்கும் நோக்கத்தில் காவல் துறையினர் கொடுத்ததாக மருத்துவர்கள் குற்றம் சாட்டினர்.

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு: ஆய்வில் உறுதி!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்பிடிஐ

காவல் துறை அழுத்தமே காரணம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர் ஒருவர் இது குறித்துப் பேசியதாவது, போராட்டம் நடத்த செய்யப்பட்ட ஏற்பாடு அனைத்தும் மக்களின் பணம்தான். மேடை அலங்காரம் செய்யும் ஊழியர்கள் சிலர் தன்னார்வலர்களாக முன்வந்து கூடாரத்துக்கான பாலிதீன் பை, மூங்கில்கள், மெத்தைகள் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். ஆனால், இன்று அவை அனைத்தையும் அவர்கள் வந்து எடுத்துச் சென்றனர்.

கூடாரங்களைப் பிரித்து மூங்கில்களையும் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, துர்கா பூஜை முன்னேற்பாடுகளுக்காக அவற்றை எடுத்துச் செல்வதாகக் கூறினர். நாங்கள் அதனை நம்பினோம். ஆனால், பின்னர்தான் தெரிந்தது, காவல் துறையினரிடம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர்கள் இதனை அகற்றியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com