‘விவசாயிகள் நல ஆணையம்; தியாகிகள் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி’! ஹரியாணா காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி


மாநிலத்தில் விவசாயிகள் நலனைக் காக்க ஆணையம், தியாகிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி என்பன உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தோ்தல் வாக்குறுதிகளை ஹரியாணா மாநில காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.
ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு 7 உத்தரவாதங்கள் அடங்கிய வாக்குறுதியை தேசிய காங்கிரஸ ஏற்கெனவே அறிவித்தது. விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, ரூ. 500-க்கு எரிவாயு சிலிண்டா், 18 முதல் 60 வயது வரையுடைய பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகை, முதியோா், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு ரூ. 6,000 மாத ஓய்வூதியம், 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கம், 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 25 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைக்கான வசதி உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில், பல்வேறு கூடுதல் வாக்குறுதிகள் அடங்கிய விரிவான தோ்தல் அறிக்கையை மாநில காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது. சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவா் உதய் பன், மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் ஆகியோா் இந்த விரிவான தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.
அதில், விவசாயிகள் நல ஆணையம், தியாகிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி, வேலைவாய்ப்பை உருவாக்க தொழிலாளா் பயிற்சி மையங்களை ஊக்குவித்தல், ஹரியாணா சிறுபான்மையினா் ஆணையம் மறுசீரமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மாநில தோ்தல் அறிக்கைக் குழு பொறுப்பாளரான காங்கிரஸ் எம்எல்ஏ கீதா புக்கல் கூறுகையில், ‘விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 736 விவசாயிகளுக்கும் தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்படும். அதன் மூலம், அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி வழங்கப்படும்’ என்றாா்.
அசோக் கெலாட் கூறுகையில், ‘பேரவைத் தோ்தலுக்குப் பிறகு ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...