/

வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?

இணையவழி குற்றங்கள்: கணக்கு விவரங்களை தர வாட்ஸ் ஆப் மறுப்பு! - காவல்துறை வழக்கு பதிவு

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 1:12 pm IST

இணையவழி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு வாட்ஸ் ஆப்பில் உள்ள சில கணக்குகளின் விவரங்களை காவல்துறை கோரியிருந்த நிலையில், அவற்றை தர வாட்ஸ் ஆப் சமூக வலைதள நிர்வாகம் மறுத்துள்ளது.

இது குறித்து குருகிராம் இணையவழி குற்றப்பிரிவு தடுப்புக் காவல் நிலையத்தில், வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் காவல் ஆய்வாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குருகிராமில் காவல்துறை விசாரணை மேர்கொண்டு வரும் ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் 4 தொலைபேசி எண்களை பயன்படுத்தி, வாட்ஸ் ஆப்பில் அந்த நபர் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மேற்கண்ட வாட்ஸ் ஆப் கணக்குகளின் விவரங்களை காவல்துறை கோரியிருந்தது. இது தொடர்பாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் காவல்துறையிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறையிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி, மேலும் விரிவான விளக்கங்களை கேட்டுள்ளது வாட்ஸ் ஆப் நிர்வாகம்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 25-ஆம் தேதி காவல்துறை தரப்பிலிருந்து, வழக்கு விசாரணை தொடர்பாக விரிவான தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், வாட்ஸ் ஆப் தரப்பிலிருந்து வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி, காவல்துறை தரப்பிலிருந்து வாட்ஸ் ஆப் நிர்வாகத்திற்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுமாறு வாட்ஸ் ஆப்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, காவல்துறை கோரிக்கைகளை நிராகரித்து வாட்ஸ் ஆப் பதில் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு உறுதுணையாக வாட்ஸ் ஆப் தளத்தின் செயல்பாடு அமைந்துள்ளதால், பாரதீய நியாய சங்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் கீழ், கிருஷ்ண சௌத்ரி உள்ளிட்ட வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.