தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தன்செயலர் வீடு மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகமல் இருக்கிறார்.
இந்த நிலையில், கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் என்.டி. குப்தா வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.