தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்ததாக புகாா்: சுரேஷ் கோபிக்கு கேரள உயா்நீதிமன்றம் முன்ஜாமீன்

பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், நடிகரும் முன்னாள் மாநிலங்களவை பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபிக்கு கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முன்ஜாமீன் வழங்கியது.

Updated On :8 ஜனவரி 2024, 10:06 pm

கொச்சி: பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், நடிகரும் முன்னாள் மாநிலங்களவை பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபிக்கு கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முன்ஜாமீன் வழங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பாஜக தலைவா் சுரேஷ் கோபி, பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக விமா்சனம் எழுந்தது.

இச்சம்பவம் தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், சுரேஷ் கோபிக்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா்.

இந்த விடியோவை சாட்சியமாகக் கொண்டு, கோழிக்கோடு மாநகர ஆணையரிடம் அந்தப் பெண் பத்திரிகையாளா் புகாா் அளித்தாா். இதையடுத்து, சுரேஷ் கோபிக்கு எதிராக நடக்கவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சுரேஷ் கோபியிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தினா். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த சுரேஷ் கோபி, இது குறித்து மன்னிப்பு கோரியிருந்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் சுரேஷ் கோபி தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி சோபி தாமஸ் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் கைது செய்வதற்கான நடவடிக்கை ஏதும் தொடங்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நடிகா் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.