
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள கம்பீர், அவருக்கு குடும்பத்துக்கும் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கம்பீரின் மின்னஞ்சல் முகவரிக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில், ‘நாங்கள் உன்னை கொல்லப் போகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லி ராஜேந்திர் நகர் காவல் நிலையம் மற்றும் மத்திய தில்லி காவல் துறை ஆணையரிடம் கம்பீர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் அவருக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தில்லி மக்களவை தொகுதியின் பாஜக எம்பியாக பதவி வகித்தபோது, 2021 ஆம் ஆண்டு இதேபோன்ற கொலை மிரட்டல் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் கம்பீர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.