
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பெஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயர் சூட்டப்படும் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.
பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதலில் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவிவேதி (வயது 31) எனும் நபர் அவரது மனைவி ஐஷான்யாவின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும், பலியான சுபம் மற்றும் அவரது மனைவியான ஐஷான்யா ஆகியோருக்கு கடந்த பிப்.12 ஆம் தேதி அன்றுதான் திருமணமானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கான்பூரின் ஷியாம் நகரிலுள்ள ஒரு பூங்கா மற்றும் சத்துக்கத்திற்கு சுபமின் பெயர் சூட்டப்படும் என கான்பூர் நகர் மேயர் பிரமிலா பாண்டே இன்று (ஏப்.26) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கான்பூர் நகராட்சி ஷியாம் நகரிலுள்ள பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு, பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவிவேதியின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்துடன், சுபமின் மனைவியான ஐஷான்யா விருப்பப்பட்டால் அவருக்கு நகராட்சியில் வேலை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று (ஏப்.25) கான்பூர் மேயர் பிரமிலா பாண்டே தலைமையில் பாஜக நிர்வாகிகள் இணைந்து நகராட்சி அலுவலத்திலிருந்து மொதிஜீல் எனும் பகுதி வரை பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.