தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு.
நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட தஹாவூர் ராணா
நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட தஹாவூர் ராணாPTI
Published on
Updated on
1 min read

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடிந்ததை அடுத்து, விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள, மேலும் காவலை நீட்டிக்க வேண்டும் என என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலில் பல்வேறு சான்றுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், 17 ஆண்டுகளுக்கு முந்தைய முக்கிய இடங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளதாலும் காவலை நீட்டிக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்ஐஏ தரப்பிலிருந்து மூத்த வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞர் நரேந்தர் மான் ஆஜராகினர். இதேபோன்று தஹாவூர் ராணா சார்பாக, தில்லி சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பியூஷ் சச்தேவா ஆஜரானார்.

முன்பு விதிக்கப்பட்டிருந்த காவல் இன்றுடன் முடிந்ததால், பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில், என்ஐஏ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மேலும் 12 நாள்களுக்கு காவலை நீட்டித்து உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி...

2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவர் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தது நிரூபிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்து, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைத்தது.

இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தன்னை இந்திய சிறையில் சித்ரவதை செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன. 21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடியிடம், தஹாவூா் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏப். 10ஆம் தேதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடன் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com