பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் தாக்குதலில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா பற்றி...
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசாவின் உத்தேச வரைபடம்.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசாவின் உத்தேச வரைபடம்.
Published on
Updated on
1 min read

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேரைக் கொன்றவர்களின் புகைப்படங்களை, காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வரைந்து போலீசார் வெளியிட்டனர்.

அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த சுலைமான் என்ற ஹாஷிம் மூசா மற்றும் தல்ஹா பாய் என்ற அலி பாய் என்பதும் மற்றொருவர் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அபித் ஹுசைன் தோக்கர் என்பதும் கண்டறியப்பட்டது.

இதில், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக்கைச் சேர்ந்த ஹுசைனின் வீட்டைப் பாதுகாப்புப் படை வீரர்கள் குண்டுவைத்து தகர்த்தனர்.

இந்த நிலையில், ஹாஷிம் மூசா குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்

ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையில் பணியாற்றியவர். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளிவந்த அவர், தடைசெய்யப்பட்ட லஷ்கர் - ஏ - தொய்பாவில் இணைந்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவி, ஸ்ரீநகர் அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் சதித்திட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில், லஷ்கர் - ஏ - தொய்பாவில் இணைய பாகிஸ்தான் ராணுவமே ஹாஷிம் மூசாவிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பெற்ற சிறப்புப் படை வீரரான மூசா, போர் மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் அதிநவீன ஆயுதங்களை கையாள்வதில் திறம்பட செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

மூன்று தாக்குதல்களில் மூசாவுக்கு தொடர்பு

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூசா குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

கடந்த 2024 அக்டோபர் மாதம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், ஒரு மருத்துவர், இரண்டு ராணுவ வீரர்கள், வெளியூரைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், 2024 இல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட 3 தாக்குதல்களில் மூசாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் குழுக்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் பல பயங்கரவாதிகளுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com