மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம் வழங்கப்படும், ரூ.540 தினக்கூலி என்ற நிலையில் உள்ளது பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை.
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணாpti
Published on
Updated on
2 min read

பெங்களூரு: கடந்த ஆண்டு, பாலியல் குற்றச்சாட்டில் சிக்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் மாதச் சம்பளம் ரூ.1.2 லட்சம். இனி, சிறையில் ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்படும்.

2024ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து, எம்எல்ஏ, எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், பாலியல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு 14 மாதங்களில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி 8 வாரங்களில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முக்கிய பிரமுகர் தொடர்புடைய வழக்கில் இவ்வளவு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹசன் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக அறியப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்ற ஒரு கைதி, வாரத்தில் ஆறு நாள்கள், நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார். இவர்களுக்கு ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்படும்.

சிறைத் துறை விதிப்படி, தண்டனை பெற்ற அனைத்துக் கைதிகளும் வேலை செய்து சம்பாதிக்க தகுதி பெற்றவர்கள். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இதுவரை எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. முதலில், பயிற்சி இல்லாமல் செய்யும் வேலைகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். ஓராண்டுக்குப் பின், அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி கொடுத்து அந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள். தையல் உள்ளிட்ட பணிகளைக் கற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், எந்தப் பணியை செய்வது என்பது குறித்து முடிவெடுக்க அவருக்கு ஒரு சில நாள்கள் அவகாசம் அளித்து அவர் விருப்பமான பணியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்தான், கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்பது சிறைத்துறை விதியாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரண தண்டனை பெற்றவர்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்று தெரிகிறது.

சாப்பாடு

இப்போதைக்கு பெங்களூரு சிறையில் காய்கறி சாதம், தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்கள் மதிய உணவாக வழங்கப்படுகின்றன.

காலையில் 6.30க்கு சிறை அறையிலிருந்து வெளியே வர வேண்டும். அனைத்து சிறை அறைகளும் மாலை 6.30க்கு அடைக்கப்பட்டுவிடும்.

செவ்வாய்க்கிழமை தோறும் சிறைக் கைதிகளுக்கு முட்டை வழங்கப்படுகிறதாம். ஒவ்வொரு மாதமும் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுக்கறியும், இரண்டு சனிக்கிழமைகளில் கோழிக்கறியும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Summary

Prajwal Revanna, who was a member of parliament before he was accused of sexual assault last year, received a monthly salary of Rs 1.2 lakh. Now, he will be paid a daily wage of not more than Rs 540 in prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com