நாடு திரும்பினார் சுபான்ஷு சுக்லா: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்டபின், சுபான்ஷு சுக்லா முதல்முறையாக இந்தியா வருகை
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் சுபான்ஷு சுக்லா. உடன் தில்லி முதல்வர் ரேகா குப்தா.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் சுபான்ஷு சுக்லா. உடன் தில்லி முதல்வர் ரேகா குப்தா.
Updated on
2 min read

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தினர் உள்பட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் நாராயணன், தில்லி முதல்வர் ரேகா குப்தாவும் வரவேற்றனர்.

சுபான்ஷு சுக்லாவை வரவேற்றது குறித்து, மத்திய அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இதனை சாத்தியமாக்கிய நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் என்று கூறியுள்ளார்.

இந்தியா வந்தடைந்த சுபான்ஷு சுக்லா, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு தனது சொந்த ஊரான லக்னௌவுக்குச் செல்லும் அவா், புது தில்லியில் ஆக.22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு இந்திய வீரா்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 வீரா்களில் ஒருவா் லக்னெளவை சோ்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39).

இவா், அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல கடந்த ஆண்டு தோ்வானாா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மறுநாள் சா்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனா்.

18 நாள்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுக்லா உள்ளிட்ட நால்வரும் உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மூலம் பூமிக்கு ஜூலை 15-ஆம் தேதி பாதுகாப்பாக திரும்பினா்.

மக்களவையில் விவாதம்

சுக்லாவின் வருகையை கொண்டாடும் வகையில், ‘சா்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி வீரா்: 2047-க்குள் வளா்ந்த இந்தியா இலக்கை அடைய விண்வெளித் துறையின் முக்கியப் பங்கு’ என்ற தலைப்பில் மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது.

2027-இல் செயல்படுத்தப்படவுள்ள இஸ்ரோவின் மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில், சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக சுமாா் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

Summary

Astronaut Shubhanshu Shukla, second Indian to go to space, returns home

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com