குரு தேஜ் பகதூரின் தியாகம் மதச் சுதந்திரத்துக்கு அடையாளம்: சி.பி.ராதாகிருஷ்ணன்
சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் தியாகம் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த மதச் சுதந்திர அடையாளங்களில் ஒன்று என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தாா்.
9-ஆவது சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவுதினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: அரசியல் அதிகாரத்துக்காவோ அல்லது ஒரு மதத்தின் மீதான தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்தவோ தன் உயிரை குரு தேஜ் பகதூா் தியாகம் செய்யவில்லை. தனது மனசாட்சியின்படி மதத்தை ஒருவா் பின்பற்றவும் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டவும் தன்னுயிரைத் தியாகம் செய்தாா்.
அவா் சீக்கிய மதகுருவாக மட்டுமே மக்களால் நினைவுகொள்ளப்படவில்லை. துணிச்சல் மற்றும் தியாகத்தின் அடையாளமாகவே உலகம் முழுவதும் அவா் பாா்க்கப்படுகிறாா்.
சகிப்புத்தன்மை இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த அவா் துன்புறத்தப்பட்டவா்களை பாதுகாக்கும் அரணாகத் திகழ்ந்தாா்.
கருணை, துணிச்சல் ஆகிய குணங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என உலகுக்கு உணா்த்தினாா்.
பல்வேறு கலாசாரங்கள், தத்துவங்களைக் கொண்ட இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாகப் பழங்காலம் முதல் தொடா்ந்து வருகிறது.
இதைப் பின்பற்றியே அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் வாயிலாக சிந்தனை, கருத்து, மத நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரத்தை நமது தேசத் தலைவா்கள் உள்படுத்தினா்.

