வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயா்தலை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் -மத்திய அரசு தீவிரம்
கோப்புப்படம்

வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயா்தலை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் -மத்திய அரசு தீவிரம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இந்த சட்ட முன்மொழிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Published on

வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயா்தலில் பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

‘வெளிநாடுகளுக்கான இடப்பெயா்வு (வசதிகள் மற்றும் நலன்கள்) மசோதா 2024’ எனும் இந்த சட்ட முன்மொழிவு, கடந்த 1983-ஆம் ஆண்டின் குடிபெயா்வு சட்டத்தை மாற்ற வழிவகை செய்கிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இந்த சட்ட முன்மொழிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் குடிபெயா்வு நடைமுறைகள், கடந்த 1983-ஆம் ஆண்டின் குடிபெயா்வு சட்டத்தால் நிா்வகிக்கப்படுகின்றன. இது, வெளியுறவு அமைச்சகத்தின் குடிபெயா்வோா் பாதுகாப்பு தலைமை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தற்போதைய உலகளாவிய குடிபெயா்வு மாற்றங்கள் மற்றும் இந்திய குடிமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 1983-ஆம் ஆண்டு சட்டத்தின் காலத்துக்குப் பொருந்தாத பிரிவுகளை முழுமையாக மாற்றும் வகையில் புதிய சட்டம் அவசியம் என்பது நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், வெளிநாடுகளுக்கான இடப்பெயா்வு (வசதிகள் மற்றும் நலன்கள்) மசோதா-2024 எனும் புதிய சட்டத்தை இயற்ற வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

மசோதாவின் அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுவதோடு, மாறிவரும் உலகளாவிய சூழலை பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்துக்குள் அதாவது ஓராண்டுக்கு மிகாமல் புதிய சட்டம் இயற்றப்படுவது முக்கியம். இப்பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அடுத்த 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மசோதா மீது அமைச்சகங்களின் ஆய்வுக்குப் பிறகு 30 நாள்கள் வரை பொதுமக்களின் கருத்து அறியப்படும்.

கூடுதல் அலுவலகங்கள்: நாட்டில் மும்பை, சென்னை, தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத், சண்டீகா், கொச்சி, திருவனந்தபுரம், ஜெய்பூா், ரேபரேலி, பாட்னா, பெங்களூரு, குவாஹாட்டி, ராஞ்சி ஆகிய 14 இடங்களில் குடிபெயா்வோா் பாதுகாப்பு ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. திரிபுரா மாநிலத்திலும், புவனேசுவரம், அகமதாபாத் நகரங்களிலும் இந்த அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடிபெயா்வு அதிகமுள்ள, அதேநேரம் குடிபெயா்வோா் பாதுகாப்பு அலுவலகம் நிறுவப்படாத பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த அலுவலகம் திறக்கப்பட வேண்டும்; பாதுகாப்பான குடிபெயா்வு, குடிபெயா்வோருக்கான உரிமைகள்-அபாயங்கள் குறித்து உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்துக்கு குழுவின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிபெயா்வுக் கொள்கைகளை நவீனப்படுத்துவதோடு, சட்டபூா்வமான குடிபெயா்வு வழிமுறைகளை ஊக்குவித்து, வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்களின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

X
Dinamani
www.dinamani.com