மகா கும்பமேளா: குடியரசுத் தலைவர் நாளை புனித நீராடல்!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை (பிப். 10) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார். இதனை குடியரசுத் தலைவர் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கும்பமேளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதுவரை 35 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
தற்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் நாளை (பிப். 10) பிரயாக்ராஜ் செல்லவுள்ளார். அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபடவுள்ளார். கங்கைக் கரையில் நடைபெறவுள்ள ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து அனுமன் மந்திர் சென்று வழிபடவுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.