
தில்லியை பாரீஸ், லண்டனைப் போன்று மாற்றுவேன் என்ற அரவிந்த் கேஜரிவாலின் வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தில்லியில் பராமரிப்பின்றி கிடக்கும் சாக்கடை கால்வாய்களையும், சாலைகளையும் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தலைநகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (ஜன. 13) சீலம்பூர் பகுதியில் பேசிய ராகுல் காந்தி,
’’ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன் என அரவிந்த் கேஜரிவால் கூறினார். அவர் ஊழலை ஒழித்தாரா? பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார் கேஜரிவால். மோடியின் யுக்தியையே அரவிந்த் கேஜரிவாலும் கையாள்கிறார். காற்று மாசு, ஊழல், பணவீக்கம் இது எல்லாமே ஆம் ஆத்மி ஆட்சியில் அதிகரித்துள்ளது’’ என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தில்லியில் பராமரிப்பின்றி காணப்படும் கால்வாய் அருகேவுள்ள குடியிருப்புப் பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது முறையான சாலை வசதியின்றி, பராமரிப்பின்றி கிடக்கும் கால்வாய்கள் அருகே வசித்துவரும் மக்களைச் சந்தித்து உரையாடினார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தில்லியை பாரீஸாக மாற்றுவேன், லண்டனாக மாற்றுவேன் எனக் கூறியவரின் தில்லி இதுதான் எனப் பதிவிட்டுள்ளார்.