/

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட 121 விவசாயிகள்!

ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

News image

விவசாயிகள்(கோப்புப்படம்)

Updated On :19 ஜனவரி 2025, 4:27 pm IST

ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. சம்யுக்த கிஸான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜித் சிங் தல்லேவால், கனெளரியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது போராட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 55வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே தல்லேவால் உடல்நிலை குறித்து விசாரிக்க சனிக்கிழமை வந்த வேளாண் அமைச்சக கூடுதல் செயலா் பிரியா ரஞ்சன் தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் குழு, பிற விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. இச்சந்திப்பு சுமாா் 2 மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த பிரியா ரஞ்சன், ‘விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தல்லேவாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம்.

சந்திப்பில் விவாதிக்கப்பட்டதன் படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவாா்த்தை சண்டீகரில் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறும், மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளுமாறும் தல்லேவாலை வலியுறுத்துகிறோம். அதன்மூலம், அவரால் மத்திய அரசின் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க முடியும்’ என்றாா். இதைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்ட ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது மருத்துவ உதவி எடுத்துக்கொண்டாலும், அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தல்லேவால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தல்லேவால் மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஞாயிற்றுக்கிழமை முடித்துக்கொண்டனர். துணை காவல் ஆய்வாளர் மந்தீப் சிங் சித்து மற்றும் பாட்டியாலா மூத்த காவல் கண்காணிப்பாளர் நானக் சிங் ஆகியோர் முன்னிலையில் பழச்சாறு குடித்து அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்.

முன்னதாக தல்லேவாலுக்கு ஆதரவாக கனெளரியில் 111 விவசாயிகள் ஜனவரி 15ஆம் தேதியும் அதைத்தொடர்ந்து மேலும் 10 விவசாயிகள் ஜனவரி 17ஆம் தேதியும் காலவரையற்ற உண்ணாவிரத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.