
சஞ்சய் ராயை நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டாலும்கூட அதனை தான் அகமகிழ்ந்து ஏற்பதாக குற்றவாளி சஞ்சய் ராயின் தாயார் ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதுநிலை பயிற்சி மருத்தவராக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். ஒட்டுமொத்த நாட்டையும் இச்சம்பவம் உலுக்கியது.
இந்த நிலையில், இந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளைக் கைது செய்து விரைந்து நீதி வழங்கிடக் கோரியும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடெங்கிலும் அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பல நாள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக, காவல் துறை தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.
இந்நிலையில், கொல்கத்தாவின் சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை கடந்த நவ.12-ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெற்றது. 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஜன.9-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்று 162 நாள்களுக்குப் பின்னா், வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
அதில், ‘பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் ராய், அதன் பின்னா் பெண் மருத்துவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கிமூடியதால் அவா் உயிரிழக்க நோ்ந்துள்ளது. சஞ்சய் ராய் குற்றவாளி’ என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்ற தீா்ப்பை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயாரும் அதேபோல, கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து சஞ்சய் ராயின் தாயார் கூறியிருப்பதாவது: “எனக்கு மொத்தம் 3 மகள்கள். அப்படியிருக்கையில், கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர் அனுபவிக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது...
அவனுக்கு (சஞ்சய் ராய்) எந்தத் தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கப் பெறட்டும். ஒருவேளை, அவனை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வேன்“ என்று ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராயின் சகோதரி ஒருவரும் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற காலத்தில், அவரை மேற்கண்ட இருவருமே சிறையில் சென்று பார்க்கவோ அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறுகையில், ‘சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், எனது மகள் கொலையில் மேலும் பலருக்குத் தொடா்புள்ளது. அவா்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கு முழுமையாக நிறைவடையவில்லை. வழக்கில் தொடா்புள்ள மற்றவா்களும் தண்டிக்கப்பட்ட பிறகே, வழக்கு முழுமையாக நிறைவடையும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம்’ என்றாா்.
இதையும் படிக்க : சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.