
மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவு தொடரும் என நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த சில மணிநேரங்களில், ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ஷேத்ரிமயும் பிரேன் சிங்கை அக்கட்சித் தலைமை நீக்கியுள்ளது.
கட்சித் தலைமையிடம் கலந்தாலோசிக்காமல் இம்முடிவை அவர் எடுத்ததாகவும், ஒழுக்கமின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக கட்சியிலிருந்து நீக்குவதாகவும் ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்ததாவது,
’’மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவு தொடரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த எங்கள் கட்சித் தொடண்டர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வருகின்றனர்.
பாஜக கூட்டணிக்கு இனி ஆதரவு இல்லை என்பது தவறானது; அடிப்படை ஆதரமற்றது. இதனைக் கட்சி கவனத்தில் எடுத்துள்ளது. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ஷேத்ரிமயும் பிரேன் சிங்கை கட்சித் தலைமை நீக்குவதாக அறிவித்துள்ளது.
ஆதரவு வாபஸ் குறித்து மாநிலக் குழுவானது கட்சித் தலைமையுடன் கலந்தாலோசிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் முடிவு செய்து அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்’’ எனக் குறிப்பிட்டார்.
கடந்த 2022 மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளை வென்றது. சில மாதங்களுக்குப் பிறகு அதில் 5 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு அணி மாறினர்.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (37 எம்எல்ஏக்கள்) உள்ளது. ஒரு எம்எல்ஏவுக்கான ஆதரவு மட்டும் திரும்பப் பெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க |மகாராஷ்டிர ரயில் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.