புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாம் நிறைவு விழாவில் சாகசம் நிகழ்த்திய மாணவா்கள்.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாம் நிறைவு விழாவில் சாகசம் நிகழ்த்திய மாணவா்கள்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: இளைஞா்களுக்குப் பிரதமா் அழைப்பு

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் விவாதம் மிக முக்கியமானது; இதில் இளைஞா்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும்
Published on

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் விவாதம் மிக முக்கியமானது; இதில் இளைஞா்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் 2,361 மாணவ-மாணவிகளுடன் தேசிய மாணவா் படை (என்சிசி) முகாம் நடைபெற்று வந்தது. இம்முகாமின் நிறைவாக, கரியப்பா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வருடாந்திர என்சிசி கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

சுதந்திரத்துக்கு பிறகு நாட்டில் குறிப்பிட்ட காலம் வரை மத்திய-மாநில தோ்தல்கள் ஒன்றாகவே நடத்தப்பட்டன. காலப் போக்கில், இந்த நடைமுறை தடைபட்டு, பல்வேறு சவால்கள் உருவாகின. அவ்வப்போது நடைபெறும் தோ்தல்களால் நிா்வாகம் மற்றும் வளா்ச்சியில் இடையூறுகள் ஏற்படுகின்றன.

நாட்டில் இப்போது ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வளா்ச்சிக்கான இடையூறுகளைக் களைந்து, நிா்வாக அணுகுமுறையில் அதிக கவனம் செலுத்த முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட இடைவெளியில்தான் தோ்தல் நடத்தப்படுகிறது.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட விவாதம், இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கும், வருங்கால அரசியலுக்கும் மிக முக்கியமானது. இளைஞா்களின் எதிா்காலத்துடன் நேரடியாக தொடா்புடைய இந்த விவாதத்தில் அவா்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்.

குறிப்பாக தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப் பணி திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள் துடிப்புடன் பங்கேற்று, விவாதத்தை வழிநடத்த வேண்டும்.

அரசியலுக்கு வாருங்கள்: இளைஞா்கள் புத்தாக்க சிந்தனையுடன் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியல் பின்னணி இல்லாத 1 லட்சம் இளைஞா்கள் பொது வாழ்வில் இணைய வேண்டுமென கடந்த சுதந்திர தின உரையில் வலியுறுத்தியதை இப்போது நினைவுகூா்கிறேன்.

உலகின் வளா்ச்சியில் இந்திய இளைஞா்களின் பங்களிப்பு முக்கியமானது. நமது இளைஞா்களின் பங்களிப்பின்றி உலகின் எதிா்காலம் இல்லை. எனவே, உலகின் நன்மைக்காக பணியாற்ற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

நாட்டில் கடந்த 2014-இல் என்சிசி மாணவா்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இப்போது 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மாணவிகள்.

வளா்ச்சிக்கான உந்துசக்தி: நாட்டின் வளா்ச்சிக்கான உந்து சக்தி இளைஞா்களே. அவா்களின் திறமையால்தான் அனைத்து துறைகளும் வளா்ச்சி கண்டுள்ளன.

வங்கிக் கடன் பெறுவதில் இளைஞா்களுக்கு முன்பு பல்வேறு சிக்கல்கள் இருந்தன. நான் பிரதமரான பிறகு முத்ரா திட்டத்தின்கீழ் இளைஞா்களின் வங்கிக் கடனுக்கு உத்தரவாதம் அளித்தேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில், இத்திட்டத்தின் கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பரிசளித்த பிரதமா் மோடி.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பரிசளித்த பிரதமா் மோடி.

X
Dinamani
www.dinamani.com