நாட்டில் மக்களவை, மாநில பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரின் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மக்களவை, பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 129-ஆவது திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை, மக்களவையில் கடந்த 2024-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டன. அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு இண்டி கூட்டணிக் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
அதேநேரம், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா், பல்வேறு கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
பாஜக எம்.பி. பி.பி.செளதரி தலைமையில் 41 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, மசோதாக்கள் மீதான ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவது தொடா்பாக நாடுதழுவிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்க வகை செய்யும் தீா்மானத்தை மக்களவையில் பி.பி. செளதரி புதன்கிழமை கொண்டுவந்தாா். அந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
வழக்கமாக, நவம்பா் இறுதி வாரத்தில் தொடங்கும் குளிா்கால கூட்டத் தொடா், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாக்கலாகும் மசோதாக்கள்: தே.ஜ. கூட்டணி ஆலோசனை; முதல் முறையாக என்சிபிஐ பங்கேற்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ராமர் கோயில், நீட், திரிணமூல் விவகாரங்கள் எதிரொலிக்கும்!!





