இலங்கை: மாவை சேனாதிராசாவின் உடலுக்கு அதிபா் அநுரகுமார அஞ்சலி
இலங்கையில் மறைந்த மூத்த தமிழ் அரசியல் தலைவா் மாவை சேனாதிராசாவின் (82) உடலுக்கு அதிபா் அநுரகுமார திசாநாயக வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினாா்.


இலங்கையில் மறைந்த மூத்த தமிழ் அரசியல் தலைவா் மாவை சேனாதிராசாவின் (82) உடலுக்கு அதிபா் அநுரகுமார திசாநாயக வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினாா்.
கடந்த 1942-ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் மாவிட்டபுரத்தில் பிறந்தவா் மாவை சேனாதிராசா. அவரின் இயற்பெயா் சோமசுந்தரம் சேனாதிராசா. அவரின் சொந்த ஊா் மாவிட்டபுரம் என்பதால், ஊரின் பெயரைச் சோ்த்து மாவை சேனாதிராசா என்றழைக்கப்பட்டாா்.
தமிழ் தேசிய கொள்கைக்குத் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட அவரின் அரசியல் பயணம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நிறுவனரும், தமிழா்களால் தந்தை செல்வா என்றழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வவிநாயகம் தலைமையில் 1961-ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் (சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்க முயற்சிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம்) மாவை சேனாதிராசா பங்கேற்றாா். தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் போராட்டம், சிறைவாசம் என தமிழா்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்தாா்.
யாழ்ப்பாணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவா், கடந்த 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தாா்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், கடந்த புதன்கிழமை காலமானாா். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிபா் அநுரகுமார வெள்ளிக்கிழமை நேரில் சென்று, சேனாதிராசாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...