ஜெய்சங்கா்
ஜெய்சங்கா்

இந்தியாவின் நிலைப்பாட்டை உலகுக்கு தெளிவுபடுத்திய ‘ஆபரேஷன சிந்தூா்’: ஜெய்சங்கா்

‘பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது
Published on

‘பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.

நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் க்வாட் உச்சிமாநாட்டுக்கான ஆயத்தமாக, உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களின் கூட்டம் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சா்கள் ஜெய்சங்கா் (இந்தியா), பென்னி வாங் (ஆஸ்திரேலியா), டகேஷி இவயா (ஜப்பான்) ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவா்கள், ஒருங்கிணைத்தவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்கள் எந்தத் தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் ஜெய்சங்கா் கூறியதாவது:

பயங்கரவாதம் தொடா்பான க்வாட் கூட்டறிக்கையும், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையும் முக்கியமானது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் அதற்கு துணை போகின்றவா்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என அந்த அறிக்கைகள் வலியுறுத்தின.

அதன் அடிப்படையிலேயே, இந்தியாவும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மேற்கொண்டு, அதுகுறித்து உலகுக்கும் தெளிவுபடுத்தியது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்பதை உலகுக்கு இந்தியா மிகத் தெளிவாக விவரித்துள்ளது என நினைக்கிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com