
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்ற பல்வேறு யூகங்கள் எழுந்தன.
இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது முதல் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது வரை பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த காணொலியில், சரியாக இன்று பிற்பகல் 1.38 மணிக்கு ஓடுதளத்தில் இருந்து புறப்படும் விமானம் சில விநாடிகளில் பறக்கத் தொடங்குகிறது.
அடுத்த 20 விநாடிகளில் மேலே பறக்க முடியாமல் தள்ளாடியபடி தரையை நோக்கி வரும் விமானம், மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறுகிறது.
இதன்மூலம் விமானம் பறக்கத் தொடங்கியவுடன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ அறிவித்திருப்பது தெரியவருகின்றது.
இதனிடையே, விமான விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.