/

குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!

அகமதாபாத் விமான விபத்தை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

News image
செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு- PTI
Updated On :14 ஜூன் 2025, 9:41 am

DIN

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆய்வு செய்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், அகமதாபாத் விமான விபத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் தனிப்பட்ட கதைகளும் நெஞ்சை கலங்கடிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை, அனைவரும் ஒன்றாக இணைந்து செய்ய வேண்டும்.

தில்லியில் இருந்து அகமதாபாத் வரும்வரையில், விமானத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இருப்பினும், 650 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து நிகழ்ந்து விட்டது. விபத்தில் உயிரிழந்தோரை அடையாளம்காண, டிஎன்ஏ பரிசோதனைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானதும், உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் ஒப்படைப்பை தாமதமின்றி மேற்கொள்ள, தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினர்

உயிரிழந்தோரின் குடும்பத்தினர்

தற்போது, சேவையில் உள்ள 34 போயிங் ரக விமானங்களையும் கூடுதலாக கவனிக்கவும், ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்த, எவ்வித தயக்கமுமின்றி, தேவையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. கறுப்புப் பெட்டியின் தகவல்களின் மூலம், விமானத்தின் இறுதிநேர நிகழ்வு குறித்து தெரிய வரும்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரிக்க உள்துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் விமானப் போக்குவரத்துச் செயலர் உள்பட பல்வேறு துறை செயலர்களும், மாநிலச் செயலர், காவல் ஆணையர் என பல அதிகாரிகளும் ஈடுபடவுள்ளனர்.

விசாரணைக்காக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், விசாரணையை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் தொடங்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.