
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடப்பதற்காக பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக்கில் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஃபாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வாகனங்களின் முன்பகுதியில் ஒட்டப்படும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு எண்ம முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 2021 முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிகளவில் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்காக ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”கார், ஜீப் போன்ற வணிக ரீதியில் இல்லாமல் சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்காக ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது, 60 கி.மீ. வரம்புக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் செலுத்தும் கட்டண முறையின் நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்யும்.
குறைந்த விலையில், எளிமையாக சுங்கச்சாவடிகளை கடக்கும் அனுபவம் லட்சக்கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவில் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆண்டு சந்தா சிறப்பம்சங்கள்
ஃபாஸ்டேக் ஆண்டு சந்தாவின் விலை ரூ. 3,000
வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகின்றது
ஆண்டு சந்தா செலுத்தியதில் இருந்து ஓராண்டு அல்லது முதல் 200 பயணங்கள் செல்லுபடியாகும்.
ஓராண்டுக்கு காலத்துக்கு முன்னதாகவே 200 முறை சுங்கச்சாவடி வழியாக பயணம் செய்துவிட்டால், மீண்டும் பணம் செலுத்த வேண்டும்
ராஜ்மார்க் யாத்ரா செயலி, என்எச்ஏஐ மற்றும் எம்ஓஆர்டிஎச் வலைதளங்களில் ஆண்டு சந்தா பாஸை பெற்றுக் கொள்ளலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.