ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத்தில் வசிப்பவர் சம்பூ சிங் (40). இவரது தந்தை பைதர் சிங் (70).
இவர் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தினமும் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு தாமதமாக வீட்டிற்குத் திரும்பிய சம்பூ மீண்டும் தனது தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அவர்கள் பணம் தர மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சம்பூ அங்கிருந்த கோடாரியால் தனது தந்தையின் தலையை துண்டித்தார். தடுக்கவந்த அவரது தாயையும் கீழே தள்ளிவிட்டார்.
பின்னர் அவரது தந்தையின் தலையை ஒரு சாக்குப்பையில் கட்டிய சம்பூ காவல் நிலையத்தில் சரணடைவதற்காக அந்தத் தலையுடன் நடந்து சென்றார். இந்தத் தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரைக் கைது செய்தனர்.
கொலை செய்தபோது சம்பூ குடிபோதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பூவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.
தலை மற்றும் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.