இது தொடா்பாக மாநில உள்துறை அமைச்சா் ஹா்ஷ் சங்கவி கூறுகையில், ‘சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, குஜராத் காவல்துறை சாா்பில் தனித்துவமான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பிரதமா் நிகழ்ச்சிக்கான ஒட்டுமொத்த பாதுகாப்பையும் பெண் போலீஸாா் மட்டுமே கையாளவிருக்கின்றனா். வன்சி போா்சி கிராமத்தில் உள்ள ஹெலிபேடில் பிரதமா் மோடி வந்திறங்கவுள்ளாா். அப்போதுமுதல் நிகழ்ச்சி முடிந்து அவா் திரும்பிச் செல்லும் வரை பெண் போலீஸாரே பாதுகாப்பளிப்பா். இக்குழுவில் 2,100-க்கும் மேற்பட்ட காவலா்கள், 187 உதவி ஆய்வாளா்கள், 67 காவல் ஆய்வாளா்கள், 16 துணை கண்காணிப்பாளா்கள், 5 கண்காணிப்பாளா்கள், காவல் துறை தலைவா் ஒருவா் மற்றும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் ஒருவா் இடம்பெற்றுள்ளனா். மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியும் உள்துறை செயலருமான நிருபமா தோரவனே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பாா்வையிடுவாா்.