ஆண்களுக்கு வாரந்தோறும் 2 மது பாட்டில்களை இலவசமாக வழங்குமாறு என கர்நாடக எம்எல்ஏ எம்டி கிருஷ்ணப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தற்போதைய நிதியாண்டுக்கான கலால் வரி வருவாய் ரூ. 36,500 கோடி வசூலிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த முதல்வர் சித்தராமையா, அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) கலால் வரி வருவாய் ரூ. 40,000 கோடியாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பான சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய மதச் சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ எம்டி கிருஷ்ணப்பா, “ஒரே ஆண்டில் மூன்று முறை அரசு வரிகளை உயர்த்தியுள்ளது. இது ஏழைகளை மிகவும் பாதித்துள்ளது. தற்போது கலால் வரி வருவாய் ரூ. 40,000 கோடி இலக்கு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரிகளை உயர்த்தாமல் எப்படி இந்த இலக்கை அடையமுடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாம் மக்கள் மது அருந்துவதை குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரைத் தடுக்க முடியாது. அவர்களிடம் பணத்தைப் பெற்று பெண்களுக்கு மாதம் ரூ. 2,000, இலவச மின்சாரம், இலவச பேருந்துப் பயணம் போன்றவற்றை வழங்குகிறீர்கள்.
அதேபோல, மது அருந்துபவர்களுக்கு வாரந்தோறும் இரண்டு மது பாட்டில்கள் இலவசமாக வழங்குங்கள். அவர்கள் அருந்தட்டும். ஆண்களுக்கு எப்படி மாதந்தோறும் பணம் வழங்கமுடியும்?
அவர்களுக்கும் ஏதேனும் கொடுங்கள். இரு மது பாட்டில்கள் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? ரேஷன் கடைகளின் மூலம் இவற்றை வழங்கலாம்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய எரிசக்தி துறை அமைச்சர் கே ஜே ஜார்ஜ், “தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசை உருவாக்கி இதனைச் செயல்படுத்துங்கள். நாங்கள் மக்கள் மது அருந்துவதைக் குறைக்க முயற்சிக்கிறோம்” எனக் கூறினார்.
எம்எல்ஏ எம்டி கிருஷ்ணப்பா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.