
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசு, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தென் மாநிலங்களில் தொகுதி குறைய வாய்ப்புள்ளதால் தென் மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவையில் விவாதிக்க அனுமதி மறுப்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களின் அமளியால் முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, மீண்டும் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மேலும் வாசகங்களுடனான டி-ஷர்ட் அணிந்து வரக்கூடாது என்று திமுக எம்.பி.க்களிடம் அவைத் தலைவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.