
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கடந்த ஏப். 25 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால் நீதிமன்றம், முழுமையான திருப்தி இல்லாமல் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்று கூறி மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையில் அமலாக்கத் துறையின் வாதத்தையடுத்து குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா என இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேருக்கு நீதிபதி விஷால் கோக்னே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், அடுத்த விசாரணை மே 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், விசாரணை தொடர்பாக தங்கள் உரிமையைக் கோரலாம் என்றும் தெரிவித்தார்.
அதாவது, இந்த வழக்கு தற்போது பரிசீலனையில் உள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க இதன் நோட்டீஸ் மூலமாக சிறப்பு உரிமை உண்டு.
நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு இது உதவும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது குறிப்பிடத்தக்கது.