
ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு அச்சத்தால் மாணவி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது பெற்றோருடன் கோட்டாவில் வசித்து வந்த அந்த மாணவி, நேற்றிரவு(மே 3) 9 மணியளவில் தனது தனி அறையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக விளங்கும் கோட்டா நகரில் தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.