இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Updated on

புது தில்லி: ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைதளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த ஏப்.22-ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து, பல்வேறு இந்திய வலைதளங்களை குறிவைத்து இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 4 ராணுவப் பொதுப் பள்ளிகளின் வலைதளங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனம் ஒன்றின் வலைதளம் ஆகியவை அடங்கும்.

இந்த இணையத் தாக்குதல்களைத் தொடா்ந்து, இணைய பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டிருக்கிறது. இந்திய வலைதளங்களில் ஊடுருவ மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இருந்து காத்துக் கொள்ளும் நோக்கில், டிஜிட்டல் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எல்லை தாண்டி தொடா்பு வைத்துள்ளவா்களின் நிதியுதவியுடன் நடத்தப்படக் கூடிய இணையத் தாக்குதல்களை கண்டறியும் வகையில், இணையவெளியை இணைய பாதுகாப்பு நிபுணா்கள் மற்றும் முகமைகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன என்று தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com