சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
Published on
Updated on
1 min read

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலப் பாடத்தில் பயின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகே மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், நாடு சுதந்திரம் பெற்று இந்த கிராமத்தில் 10ம் வகுப்புத்தேர்ச்சி பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நிஸாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்கேவல் என்ற மாணவர், தலித் மக்கள் 300 பேர் வாழும் கிராமத்தில் பிறந்து, அருகில் உள்ள பள்ளியில் பயின்றி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்த ராம்கேவல், பகலில் குடும்பத்துக்காக பல்வேறு வேலைகளையும் செய்துவிட்டு, இரவில் விளக்கு ஒளியில் படித்து தேர்வெழுதியிருக்கிறார்.

இந்த மாணவருக்கும், பெற்றோருக்கும் மாவட்ட நீதிபதி பரிசு வழங்கி கௌரவித்துள்ளார். மேற்கொண்டு மாணவரின் உயர்கல்விக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

திருமண விழாக்களுக்கு மிகப்பெரிய விளக்குகளை தூக்கிச் செல்லும் வேலை செய்து அதன் மூலம் முகூர்த்த நாள்களில் ரூ.250 முதல் ரூ.300 வரை வருவாய் ஈட்டிக் குடும்பத்துக்குக் கொடுத்து வந்ததாகவும், இதனால், நள்ளிரவில்தான் வீட்டுக்குத் திரும்புவேன், ஆனாலும் ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது படித்துவிட்டுத்தான் உறங்குவேன் என்று உணர்ச்சிப்பொங்கக் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, கிராமத்தில் சிலர் தன்னைப் பார்த்து 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைய மாட்டாய் என்று கேலி செய்து வந்ததாகவும், அவர்கள் கூறுவது நடக்காது என நிரூபிக்க கஷ்டப்பட்டு படித்தேன் என்றும், ஏழ்மை நிலை ஒருவனை என்னவாக வேண்டுமானாலும் மாற்றும். ஆனால், நான் படிக்க வேண்டும். அதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்றே நினைத்து உறுதியோடு படித்ததாகவும் கூறுகிறார்.

தன்னுடன் பகல் முழுவதும் வேலைக்கு வந்தாலும், வீட்டுக்கு வந்ததும், எனது மகன் படிக்கத் தொடங்கிவிடுவான் என்கிறார் இவரது தாய் புஷ்பா.

ஒரு கிராமத்தின் வரலாற்றையே இந்தக் குடும்பம் திருத்தி எழுதியிருப்பதாகவும், கல்வி மீது நம்பிக்கை இழந்து இருக்கும் இந்தக் கிராமத்து மாணவர்கள் அனைவருக்குமே இவர் ஒரு முன்மாதிரியாக மாறியிருப்பதாகவும் பலரும் இவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இனி தங்களது பிள்ளைகளும் ராம்கேவல் போல படிப்பார்கள் என்று பல பெற்றோர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com