
புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பிலிருந்து இன்று(மே 5) அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகை நடத்திட வேண்டும்.
அப்போது முக்கியமாக கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,
வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டால் உஷாராக ஏதுவாக அபாய ஒலி சைரன்களை ஒலிக்கச் செய்தல்.
குடிமக்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளித்தல்.
இந்த பயிற்சியானது குடிமக்கள் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒருவேளை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அப்போது தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி என்பதையும் பயிற்சியின்போது விளக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே, இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது உறுதி என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக, இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார். உயர்நிலை அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் தொடர்புகொண்டு பிரதமர் அலுவலக வட்டாரங்கள் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பதிலடிக்கு முப்படைகள் தயாராகி வரும் சூழலில், மத்திய அரசின் மேற்கண்ட நகர்வுகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் போர்ப்பதற்றத்தையும் அதிகரித்துள்ளது...