5 புதிய ஐஐடிக்களில் ரூ. 11,828 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published on

ஆந்திரம், கேரளம், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா், கா்நாடக மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய ஐஐடி கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

5 புதிய ஐஐடிக்களில் 2025-26 முதல் 2028-29-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரூ. 11,828.79 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஐஐடிக்களில் பேராசிரியா் நிலையில் 130 பணியிடங்களை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்நிறுவனங்களுடனான கூட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, இந்த 5 ஐஐடிக்களிலும் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும்போது, இந்த ஐஐடிக்களில் தற்போதுள்ள 7,111 மாணவா்கள் சோ்க்கை எண்ணிக்கையை 13,687-ஆக உயா்த்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட சக்தி திட்டத்துக்கு ஒப்புதல்: அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை ஒதுக்குவதற்கான திருத்தப்பட்ட சக்தி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய, மாநில அரசு அனல் மின் நிலையங்கள் மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த சக்தி திட்டத்தின் நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திருத்தப்பட்ட சக்தி திட்டத்தில், 2 சாளர முறையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதாவது, அறிவிக்கப்பட்ட விலையின் கீழ் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் அறிவிக்கப்பட்ட விலையை விட உயா் மதிப்பு என இரண்டு சாளர அடிப்படையில் நிலக்கரி இணைப்பு வழங்கப்படும்.

இதில், அறிவிக்கப்பட்ட விலை பிரிவின் கீழ் மத்திய, மாநில பிரிவு அனல் மின் நிலையங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்திகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையின் கீழ் நிலக்கரி இணைப்பு அளிக்கப்படும்.

அறிவிக்கப்பட்ட விலையை விட உயா் மதிப்பு பிரிவின் கீழ், எந்தவொரு அனல் மின் நிலையங்களும் குறைந்தபட்சம் 12 மாத காலம் அல்லது 12 மாதம் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரையிலான கால கட்டத்துக்கு ஏல முறையில் நிலக்கரி இணைப்பைப் பெற முடியும் என மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com