
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருக்கு காப்புரிமை கோரி 5 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காக அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்திருந்தன. இதில், ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் காப்புரிமை வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு இயக்குநரை அணுகியுள்ளனர்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ரிலையன்ஸ் இன்க் மற்றும் ஐந்து நிறுவனங்கள் வர்த்தக முத்திரை கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர, முகேஷ் சேத்ராம் அகர்வால், குரூப் கேப்டன் கமல் சிங் ஓபர், அலோக் கோத்தாரி, ஜெயராஜ் மற்றும் உத்தம் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்ற ரிலையன்ஸ்
இந்த நிலையில், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இதனால், தங்கள் விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுவதாக ரிலையன்ஸ் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அந்தக் கடித்தத்தில், “ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கு காப்புரிமை கோரி எண்; 6994264-ல் விண்ணப்பித்திருந்தோம். அதைத் திரும்பிப் பெற்றுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சிந்தூர் என்பது என்ன?
சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் என்பதால், தங்களது கண் முன்னே கணவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த, பெண்களின் குங்குமத்துக்கு பதில் சொல்லும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பெயரை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை