
இந்தியா மீது பாகிஸ்தான் எந்தவொரு ராணுவத் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், அப்பகுதிகளிலுள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் தில்லி வந்துள்ள ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி - ஐ அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்தச் சந்திப்பின் போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
”பஹல்காமில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களே எல்லையைக் கடந்து பயங்கரவாத அமைப்புகள் மீது இந்தியாவைத் தாக்குதல் நடத்த தூண்டியுள்ளன. எங்களது இலக்குகள் சரியாகக் கணிக்கப்பட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தப் பதற்றமான சூழலை அதிகரிப்பது எங்களது நோக்கமில்லை. ஆனால், இந்தியா மீது ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், நெருங்கிய கூட்டாளியும் அண்டை நாடுமான ஈரான் -க்கு இந்தப் போர்ப் பதற்றமான சூழல் குறித்து தெளிவான புரிதல் இருப்பது மிக முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் நேற்று (மே 7) இரவு அரசு முறைப் பயணமாக புது தில்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.