
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை முழுவதுமாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்திய ராணுவம் கடந்த மே 6 ஆம் தேதி நள்ளிரவு அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அப்பகுதிகளிலிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதினால் இருநாடுகளுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், பாதுகாப்புப் படைகள் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சுமார் 1,037 கி.மீ. நீளமுள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையானது முற்றிலும் மூடப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை இணைந்து உச்சகட்ட ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ராஜஸ்தானின் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜோத்ப்பூர், ஜெய்சால்மர், நல், பாலோடி, உத்தலாய் ஆகிய இடங்களிலுள்ள விமானப் படை தளங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சுக்கோய் சு - 30 உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் அம்மாநிலத்தின் ஸ்ரீ கங்கா நகர் முதல் கட்ச் பாலைவனம் வரையில் பறந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.
ராஜஸ்தானின் இந்திய எல்லை முழுவதும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக தாக்குதல்கள் நடத்த வீரர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இத்தகைய, பதற்றமான சூழலிலும் ராஜஸ்தானின் எல்லையிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவசரகாலத்தில் மக்களை வெளியேற்றும் திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும், நடைமுறைகளின்படி பாதுகாப்புப் படைகள் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரி எம்.எல். கார்க் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்!