
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லையெனினும், இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்து வருகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.