பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஜம்மு - காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து சிறிய வகை பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது.
இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மூன்றாவது நாளாக எல்லையோரப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இருள் சூழ்ந்த வானில் ஒளிப்புள்ளியாகத் தெரியும் ட்ரோன்களை இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தியா மீது 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்திய வான்பாதுகாப்பு தடுப்பு அமைப்பு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், ரேடார் அமைப்பில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வெடி சத்தம் கேட்டு வருவதால், மீண்டும் சைரன் ஒலி எழுப்பி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறதா இந்தியா? இன்றும் இருளில் மூழ்கிய நகரங்கள்!