
புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் இருதரப்பிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்த சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தையும் அழித்தொழித்துள்ளது.
இந்த நிலையில்தான், இந்திய ராணுவம் இன்று காலை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்தப் பதிவை இட்டுள்ளது.
அதில், நமது மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிபொருள்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற ஒரு தொடர் தாக்குதலில், இன்று காலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பாகிஸ்தானின் ஆயுதமேந்திய ஏராளமான ட்ரோன்கள் பறந்து வந்து தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. நமது வான் பாதுகாப்புப் பிரிவு எடுத்த துரித நடவடிக்கையால், பாகிஸ்தானினின் அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தியாவின் இறையாண்மையை மீறி நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கும், நாட்டு மக்களை ஆபத்தில் தள்ளுவதற்கும், தொடர்ந்து பாகிஸ்தான் எடுத்துவரும் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. எதிரிகளின் திட்டங்களை இந்திய ராணுவம் துணிவோடு முறியடிக்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளது இந்திய ராணுவம்.
இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்கள்
ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இந்தியா இந்த தாக்குதல்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது.
தொடர்ந்து, வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பானது சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
இதையும் படிக்க.. இந்தியா பதிலடி: செய்திகள் - நேரலை!!
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லாவில் இருந்து குஜராத்தின் புஜ் வரை 26 இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. அனைத்தும் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.