
தில்லியில் இருவேறு நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 3 குழந்தைகள் உள்பட 9 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லியின் நரேலா பகுதியில், கடந்த மே 25 ஆம் தேதியன்று அம்மாநில காவல் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக அங்கு வசித்த 4 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் குடியேறிய அந்நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் நால்வரும் வங்கதேசத்தின் குதிகிராமம் மற்றும் நாகேஷ்வரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஹஃபிசுல் (வயது 19), மொமினுல் (21), ஷமிம் (22) மற்றும் இனாமுல் (38) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் அனைவரும் குழந்தைகளாக இருந்தபோதே தங்களது பெற்றோர்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் தற்போது அவர்களது பெற்றோர்கள் மட்டும் வங்கதேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கிழக்கு மாவட்டத்தில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 3 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தின் ஷிமுலாபுரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஹீன் (30), அவரது மனைவி ருஜீனா (26) எனத் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களது 14,9 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தினர் அனைவரையும் அவர்களது தாயகத்துக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரையில், கிழக்கு மாவட்டத்திலிருந்து மட்டும் 20 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு அவர்களது தாயகத்துக்கே நாடுகடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் தலைதூக்கும் கரோனா! ஜார்க்கண்டில் புதியதாக 2 பாதிப்புகள் உறுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.