
கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், "அனைவரின் மதிப்பும் (புகழ்) எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. கமல் ஹாசன் ஒரு காலத்தில் பெரிய நடிகராகவும், ஹீரோவாகவும் இருந்தார். எல்லோரும் அவரை விரும்பினர். இப்போது அவர் ஒரு அரசியல்வாதியாகிவிட்டார்.
எனவே, தனது மதிப்பை (அரசியல் ரீதியாக) அதிகரிக்கவும், விளம்பரத்திற்காகவும், இவ்வாறு அவர் பேசியுள்ளார். அவர் ஏற்கனவே கர்நாடகத்தில் பணியாற்றினார். அவர் இங்கே சாப்பிட்டு தண்ணீரும் குடித்திருக்கிறார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். அரசியல் மற்றும் விளம்பரத்திற்காகவே அவர் இப்படி பேசியுள்ளார்.
இது வேலை செய்யாது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் வேறுபட்டவை அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறோம் என்றார். இதனிடையே கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மே 30 ஆம் தேதிக்குள் கமல்ஹாசன் பொது மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது 'தக் லைஃப்' படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகா்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நாசா், நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோா் நடித்த ‘தக் லைஃப்’ என்ற திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் மே 24 ஆம் தேதி நடந்த படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கன்னட நடிகா் சிவராஜ்குமாரை பாராட்டும் வகையில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று கூறியிருந்தாா்.
இது, கா்நாடகத்தில் பெரும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதேபோல நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தனது பேச்சுக்கு அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.