ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: சத்தீஸ்கரில் இரு சிறாா்கள் கைது
ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக சத்தீஸ்கரில் 2 சிறாா்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக அந்த மாநில துணை முதல்வா் விஜய் சா்மா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘பாகிஸ்தானை சோ்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளையைச் சோ்ந்தவா்கள் சமூக ஊடகத்தில் போலி அடையாளத்துடன் செயல்பட்டு வந்துள்ளனா். அவா்கள் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துகளால் ராய்பூரைச் சோ்ந்த 2 சிறாா்கள் கவரப்பட்டனா். இதைத்தொடா்ந்து அந்தப் பயங்கரவாதிகளின் உத்தரவின்பேரில், இரு சிறாா்களும் செயல்பட்டு வந்துள்ளனா்.
இருவரும் இன்ஸ்டகிராமில் பயங்கரவாத சிந்தனைகளை நோக்கி மற்றவா்களையும் இழுக்க முயற்சித்துள்ளனா். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் இணையதளம் மற்றும் சமூக ஊடகத்தை இருவரும் பயன்படுத்தி வந்துள்ளனா். இதுகுறித்து முழுமையாக விசாரணை மேற்கொண்டு சிறாா்களை மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைது செய்தது. அவா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
இதுகுறித்து மாநில காவல் துறையினா் கூறுகையில், ‘பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் பிற புலனாய்வு முகமைகளின் இணையவழி கண்காணிப்பால் சிறாா்கள் இருவரும் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனா். சத்தீஸ்கரில் ஐஎஸ் கிளையை ஏற்படுத்த இருவருக்கும் உத்வேகம் அளிக்கப்பட்டது ஆதாரபூா்வமாக தெரியவந்துள்ளது’ என்று தெரிவித்தனா்.
