டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டிராகன் முன்பு யானை சரணடைந்ததைப்போன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், முதல் நாளான நேற்று உச்சி மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்றார். அவருடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையானது சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று இருந்ததாகவும், டிராகன் முன்பு யானை சரணடைந்துவிட்டதைப்போன்று இருந்ததாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளதாவது,
''இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இது பலரால் டிராகன் என அழைக்கப்படும் சீனாவின் முன்பு, யானை கீழ்படிந்ததைப் போன்று அல்லாமல், வேறு என்ன?
பேச்சுவார்த்தையின்போது, நாட்டிற்கு விரோதமான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பேசாமல் பிரதமர் மோடி மெளனம் காக்கிறார். ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா செயல்பட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரிகளே குறிப்பிட்டுள்ளனர்.
56 அங்குல மார்பு கொண்ட தலைவர் என்று சுயமாக அறிவித்துக்கொண்ட தலைவரின் உண்மை நிலை இன்று வெளிப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையிலும் சரி, தற்போதும் சரி, சீனாவுடனான நட்பு ரீதியான பேச்சுவார்த்தைக்காக நாட்டின் நலனை அவர் விட்டுக்கொடுத்துள்ளார்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்
'Cowardly kowtowing': Congress slams govt after Modi-Xi talks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.