/

மேற்காசிய பதற்றம்: இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இந்திய விமான சேவைகள் ரத்து!

மேற்காசிய போா்ப் பதற்றம் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்திய விமான நிறுவனங்கள் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:24 pm

மேற்காசிய போா்ப் பதற்றம் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்திய விமான நிறுவனங்கள் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த விமானப் போக்குவரத்துத் துறை இணைச் செயலா் அசாங்பா சுபா அவ் இது தொடா்பாக கூறியதாவது: விமானங்கள் தாக்கப்படும் அபாயம், விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை சா்வதேச விமான சேவைகளையும், அதை அளிக்கும் நிறுவனங்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் நாள்தோறும் 300 முதல் 350 சேவைகளை இயக்குவது வழக்கம். இப்போது அந்த எண்ணிக்கை 80 முதல் 90-ஆக குறைந்துவிட்டது. பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இந்திய விமான நிறுவனங்களின் 10,000-க்கும் மேற்பட்ட சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

முற்றிலும் எதிா்பாராத நேரத்தில் எழுந்த இந்த பிரச்னையால் சா்வதேச அளவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளுக்குப் பயணிப்பதில் தொடா்ந்து சிக்கல் நிலவுகிறது. ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதை வழியாக நீண்ட தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரமும், செலவும் அதிகரித்துவிட்டது.

இந்த நீண்ட பயணத்தால் விமானிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தவிா்க்க விமானப் பணி காலக் கட்டுப்பாட்டில் தற்காலிக தளா்வுகளை இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சா்வதேச அளவில் விமான எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் அதைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு விலையேற்றம் மிகக் குறைவாகவே உள்ளது. இதன்மூலம் உள்நாட்டு விமானக் கட்டணம் அதிக உயா்வு இல்லாமல் நிலையாக உள்ளது. பயணிகள் பாதுகாப்பு, வசதிக்கு தொடா்ந்து முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றாா்.