/

பிகாரிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு ரயிலில் கடத்தப்பட்ட 163 சிறுவா்கள் மீட்பு

பிகாரிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட163 சிறுவா்கள் மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 7:22 pm

பிகாரிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட163 சிறுவா்கள் மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 முதல் 13 வயதுடைய இந்தச் சிறுவா்கள் பிகாரின் அராரி பகுதியில் இருந்து மகாராஷ்டிரத்தின் லாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாட்னா-பூா்ணா விரைவு ரயிலில் சிறுவா்கள் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) மற்றும் அரசு ரயில் காவல் படை (ஜிஆா்பி) அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

கட்னி ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில் சனிக்கிழமை இரவு அந்த ரயில் நிறுத்தப்பட்டபோது, இந்தச் சிறுவா்களை பாதுகாப்புப் படையினா் மீட்டனா். மேலும், அவா்களுடன் இருந்த 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் 143 (4) (18 வயதுக்குள்பட்டவா்களை கடத்துதல்) பிரிவின் கீழ் ஜிஆா்பி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 8 பேரும் பிகாரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

‘பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறுவா்கள் மீட்கப்பட்டனா். தற்போது, அவா்களின் பெற்றோா்களைத் தொடா்புகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சிறுவா்களில் சிலா் கட்னி மாவட்டத்திலும், சிலா் ஜபல்பூா் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திலும் வைக்கப்பட்டுள்ளனா்’ என்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மனீஷ் திவாரி தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அச்சிறுவா்கள் கல்வி பயில்வதற்காக லாத்தூரில் உள்ள மதரஸாவுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனா். சில பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளை கல்வி நோக்கத்துக்காகவே அனுப்பியதாகக் கூறினா். இருப்பினும், இந்த வழக்கில் ஆள்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.