அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, ஈரான் மற்றும் பல நாடுகளின் தூதரகங்கள் சனிக்கிழமையன்று இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தன. இந்திய நாட்டுடனான தங்களின் இருதரப்பு உறவுகளை வலியுறுத்தியும், அதன் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவ நெறிகளை அடிக்கோடிட்டுக் காட்டியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தன.
தில்லியிலுள்ள பல தூதா்கள் சமூக ஊடகங்கள் மூலமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.
‘இந்தச் சிறப்பு நாளைக் கொண்டாடும் இந்தியா முழுவதிலும் உள்ள எங்கள் நண்பா்களுக்கு எங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கும் உலகின் பழமையான ஜனநாயக நாட்டிற்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியத்துவம் வாய்ந்ததும் தொலைநோக்குடையதும் ஆகும். வரும் ஆண்டுகளில் அமெரிக்க-இந்தியக் கூட்டாண்மையை வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிா்பாா்க்கிறோம். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா!‘ அமெரிக்க தூதரகம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறியது.
ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூா் உயா் ஆணையா்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.
‘இந்தியாவில் எண்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆண்கள்-பெண்கள்-குழந்தைகளுக்கும் பங்களாதேஷ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. நீண்ட சுதந்திர இயக்கத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீர ஆத்மாக்களை நாங்கள் ஆழ்ந்து நினைவுகூா்கிறோம்‘ என்று தில்லியில் உள்ள பங்களாதேஷ் உயா் ஆணையம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறியது.
இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயா் ஆணையா் பிலிப் கிரீன், தனது எக்ஸ் பதிவை ஒரு இந்தி சொற்றொடருடன் தொடங்கி, அனைத்து இந்தியா்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தாா். மேலும், ‘உயா் ஆணையம் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் ஜொலிக்கிறது, எங்கள் குழுவினா் இந்திய மூவா்ணக் கொடியின் வண்ணங்களில் பெருமையுடன் ஆடை அணிந்துள்ளனா். எங்கள் அனைவரின் சாா்பாக, உலகெங்கிலும் உள்ள இந்தியா்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!‘ என்று அவா் கூறினாா்.
இந்தியாவிற்கான சீனத் தூதா் சூ ஃபெய்ஹாங் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு, செங்கோட்டை வளாகத்தில் இருந்து சில புகைப்படங்களைப் பகிா்ந்து, எக்ஸ்-இல் ‘இந்தியாவுக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள்‘ என்று எழுதினாா்.
இந்தியாவிற்கான ஜொ்மன் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஜாஸ்பா் வீக், எக்ஸ்-இல் ஒரு பதிவில், ‘அனைத்து இந்தியா்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! என்று கூறி, ஒரு குறுகிய காணொளியையும் பகிா்ந்தாா். ‘இந்த மகத்தான நாளில், இந்திய மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்,‘ என்று அவா் அந்தக் காணொளியில் கூறினாா். ஜொ்மன் தூதரகம் அவரது காணொளிப் பதிவை எக்ஸ்-இல் பகிா்ந்து, ‘இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியா!,‘என்று எழுதியது.
இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகம் முகநூலில் ஒரு காணொளியைப் பதிவிட்டது. ‘சுதந்திரதினம்2026 அன்று எங்களின் மனமாா்ந்த வாழ்த்துக்கள்! இந்தியாவைத் தங்கள் இல்லமாகக் கருதும் அனைவா் மனதிலும் - சிறிது காலத்திற்காவது - ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விடைபெறும் எங்கள் பிரெஞ்சு சக ஊழியா்களிடம், இந்தியாவைப் பற்றி அவா்கள் எதை அதிகம் இழப்பாா்கள் என்று கேட்டோம். அவா்களின் பதில்கள் அனைத்தையும் சொல்கின்றன என்று அது கூறியது.
சிங்கப்பூா் உயா் ஆணையம் மற்றும் ஈரான், இஸ்ரேல் தூதரகங்களும் இந்தியா்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தன.
Summary
Independence Day: Foreign embassies and envoys in Delhi extend greetings.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டையிலிருந்து பொய் பேசக் கூடாது: அகிலேஷ் யாதவ்

சுதந்திர தின விழா: கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தினம்: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரம்

சுதந்திர தின கொண்டாட்டம்: செங்கோட்டையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



